தனியார் நிறுவன பயிர் ரகங்களுக்கு பதிவுச் சான்று அவசியம் என திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் டேவிட் டென்னிசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயத்துக்கு மிகவும் முக்கிய ஆதாரமாக இருப்பது தரமான விதை உற்பத்தி ஆகும். தரமான விதைகள் விதைச்சான்றளிப்புத் துறையால் சோதனை செய்யப்பட்டு ""சான்றளிக்கப்பட்ட விதை'' என்ற பெயரில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தனியார் நிறுவனங்களால் பல புதிய ரக விதைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைகிறது.
எனவே, தனியார் நிறுவன ரகங்கள் அனைத்தும் விதைச் சான்றுத் துறையில் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 1ஆம்தேதி முதல் ""பதிவு எண் சான்று'' பெறாத தனியார் விதைகளை இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என குறிப்பிட்டுள்ளார்.