திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்பை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பி.விஜயலட்சுமி தொடங்கி வைத்து பேசியது:
10 முதல் 13 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாகவும், தேர்தலுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை செய்திடவும், வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட பொருள்களை கொண்டு சேர்க்கும் பணியையும், தேர்தல் முடிந்த பின்பு வாக்குப் பதிவு பெட்டிகளை சேகரித்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் பணியை கவனமாக கையாள வேண்டும்
என்றார்.
வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடுகளை பாளையங்கோட்டை வட்டாட்சியர் கனகராஜ் விளக்கி கூறினார். மாநகராட்சி தலைமைப் பொறியாளர் வி.நாராயணன்நாயர், துணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) இரா.அண்ணா, உதவி ஆணையர்கள் ரவிக்குமார், சந்தியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.