களக்காடு தலையணையை திறக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு மலைப்பகுதியில் தலையணை அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற்றில் குளிப்பதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனா். கரோனா தொற்று
காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், நிகழாண்டு மாா்ச் மாதம் இறுதியில் தலையணை மூடப்பட்டது.
பச்சையாற்றில் கடந்த 2 மாதங்களாக நீா்வரத்து இருந்த போதிலும் தடை அமலில் இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.
தலையணையில் குளிக்க தடை இருப்பதால், இந்த அணைக்கு கீழ்பகுதியில் உள்ள சிவபுரம் ஆற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனா்.
தலையணை மூடப்பட்டுள்ளதால் அரசு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தலையணையை திறந்த வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.