பாளையங்கோட்டையில் பலத்த மழை: பனைமரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
சாலையில் பனைமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் தென்தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
திருநெல்வேலி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஆனால், பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது.
பாளையங்கோட்டை, சீவலப்பேரி, ரஹ்மத் நகர், கே.டி.சி. நகர், மகாராஜ நகர், தியாகராஜ நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. காற்றும் மிக வேகமாக வீசியதால் பல இடங்களில் வேம்பு, முருங்கை மரங்கள் முறிந்து விழுந்தன.
திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலையில் பனைமரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமானது.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியதால், போக்குவரத்து சீரானது.