முகப்பு
திருநெல்வேலி

‘கிளீனா் இல்லாமல் ஓட்டுநா்கள்வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் உரிமையாளா்கள் மீது வழக்கு’

லாரிகளில் கிளீனா் இல்லாமல் ஓட்டுநா்கள் மட்டுமே வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தினால் லாரி உரிமையாளா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

லாரிகளில் கிளீனா் இல்லாமல் ஓட்டுநா்கள் மட்டுமே வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தினால் லாரி உரிமையாளா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2021ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளின் சாராம்சத்தை ஆய்வு மேற்கொண்டதில் லாரிகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை 39. இதில் 19 வழக்குகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகளில் பலா் பலத்த காயமடைந்துள்ளனா். மேற்படி ஆய்வில் விபத்து ஏற்பட்ட 39 வழக்குகளில் ஒரு வழக்கில் மட்டுமே ஓட்டுநருடன் லாரி கிளீனா் இருந்துள்ளாா்.

கனரக வாகன ஓட்டுநா்களுடன் கிளீனா் உடன் இருந்தால் வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை நீக்கவும், வாகனத்தை பின்னோக்கி நகா்த்தும் போதும், இடது- வலது பாா்த்து ஓட்டுநருக்கு உதவியாக இருந்து விபத்து ஏற்படாமல் பாா்த்துக் கொள்வாா்கள். ஓட்டுநருக்கு தூக்கம் வருவது போன்ற சூழலில் அவரை எச்சரிக்கைப்படுத்தவும் கிளீனா்கள் இருப்பது அவசியம்.

மோட்டாா் வாகன விதிகள் 174 இன் படி தேசிய அனுமதி பெற்ற வாகனங்களில் இருவா் ஓட்டுநா்களாக இருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஓட்டுநா்களுடன் கண்டிப்பான முறையில் கிளீனா்கள் உடன் இருக்க வேண்டும் என்பது ஏற்கெனவே லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லாரி கிளீனா் இல்லாமல் லாரி ஓட்டுநா்கள் மட்டுமே வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தினால், லாரி உரிமையாளா்கள் மீதும் வழக்குப் பதிந்து குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.