ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல்: 30 நாள் சலுகைக் காலம் பரிந்துரை!
ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு, 30 நாட்கள் சலுகைக் காலம் வழங்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
புதுதில்லி: ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு, 30 நாட்கள் சலுகைக் காலம் வழங்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்தக் காலத்தில் உரிமம் தொடர்ந்து செல்லுபடியாகும்.
இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதாவால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் விஸ்வாஸ் (Jan Vishwas) மசோதாவின் ஒரு பகுதியாகும்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சில இணக்கங்களுக்குத் தளர்வு அளிக்கவும், சட்டரீதியான 20 திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட அதிகார வரம்பிற்குப் பதிலாக மாநிலம் முழுவதும் வாகனப் பதிவை அனுமதிப்பது, மற்றும் ஓட்டுநர் உரிமம் காலாவதியான பிறகு விண்ணப்பிக்கும் பட்சத்தில், காலாவதியான தேதியிலிருந்து அல்லாமல், விண்ணப்பித்த தேதியிலிருந்தே புதுப்பிக்க அனுமதிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
உரிமம் காலாவதியான பிறகு முப்பது நாட்கள் சலுகைக் காலம் வழங்கவும் முன்மொழிந்துள்ளது.