பாபநாசத்தில் சிறுத்தை தாக்கியதில் 4 ஆடுகள் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் கோட்டம் பாபநாசம் வனச்சரகப் பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழந்தன.
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் கோட்டம் பாபநாசம் வனச்சரகப் பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழந்தன. ஒரு ஆடு காயமடைந்தது. ஒரு ஆட்டைத் தூக்கிச் சென்றது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் பாபநாசம் வனச்சரக மலையடிவார கிராமம் அனவன்குடியிருப்பு. விவசாய கிராமமான அனவன்குடியிருப்பைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் கூலி வேலைப்பார்ப்பதோடு ஆடு வளர்த்து வருகிறார். வீட்டின் பின்புறம் தொழுவம் அமைத்து அதில் ஆடுகளைக் கட்டிவைப்பார். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஆடுகள் ஓலமிட்டதையடுத்து எழுந்துவந்து மாரியம்மாள் பார்த்த போது ஆடுகளை சிறுத்தைத் தாக்கிக் கொண்டிருந்துள்ளது. உடனடியாக விளக்கைப் போட்டதும் சிறுத்தை ஒரு ஆட்டை வாயில் கவ்வியபடித் தப்பிச் சென்றுள்ளது. மேலும் வந்து பார்த்தபோது சிறுத்தை தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழந்திருந்தன. ஒரு ஆடு காயமடைந்திருந்தது. இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து பாபநாசம் மலையடிவார கிராமங்களான செட்டிமேடு, வேம்பையாபுரம் பகுதிகளில் பகல் நேரத்திலேயே சிறுத்தை நடமாட்டம் இருக்கும் நிலையில் மற்றொரு கிராமமான அனவன்குடியிருப்பில் ஊருக்குள் நுழைந்து 4 ஆடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்றுள்ளது. இதனால் மலையடிவார கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர் மேலும் வனப்பகுதியிலிருந்து சிறுத்தை, யானை, கரடி, மிளா உள்ளிட்ட மிருகங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு வீட்டு விலங்குகளையும் தாக்கி கொன்று வருகிறது.
எனவே வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறாமல் இருக்க வனத்துறை விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை சார்பில் மாரியம்மாளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து பத்திரிகையாளர்கள் செய்தி எடுக்க சென்ற நிலையில் பாதிக்கப்பட்டவரை செய்தியாளர்களுக்கு ஏன் தகவல் கொடுத்தீர்கள் என்று வனத்துறையினர் மிரட்டினர். இதுபோன்று வனவிலங்குகள் தாக்குதல் குறித்த செய்தி சேகரிக்கும் போது வனத்துறையினர் தடுப்பதும் தொடர்புடையவர்களை மிரட்டுவதும் வாடிக்கையாகி வருகிறது.