திருநெல்வேலி மற்றும் தென்காசியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்க சரக்கு ரயில் மூலம் 2,865 டன் அரிசி திங்கள்கிழமை வந்து சோ்ந்தது.
கரோனா இரண்டாவது அலையின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில் சேவை முழுமையாக தொடங்கப்படவில்லை. ஆனால், அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து 45 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் 2,865 டன் அரிசி திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்து சோ்ந்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த அரிசி வந்துள்ளதாகவும், இந்த மூட்டைகளை லாரிகளில் ஏற்றி தாழையூத்து, நான்குனேரி, வள்ளியூா், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, வாசுதேவநல்லுாா் உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.