முகப்பு
திருநெல்வேலி

நெல்லை: தாமிரவருணியில் மூழ்கி தந்தை, மகன் பலி

திருநெல்வேலியில் தாமிரவருணியில் தந்தை, மகன் திங்கள்கிழமை மூழ்கினர். அவர்களில் ஒருவர் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். மற்றவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
 திருநெல்வேலி கைலாசபுரம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தாமிரவருணியில் தந்தை, மகன் திங்கள்கிழமை மூழ்கினர். அவர்களில் ஒருவர் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். மற்றவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (58). அங்குள்ள கோயிலில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது மகன் சங்கரசுப்பிரமணியன் (20). ஒரு கல்லூரியில் இளநிலை வணிகவியல் இரண்டாமாண்டு பயின்று வந்தார். சுவாமிநாதனின் உறவினர் இறந்ததையடுத்து விஷேச நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்தினருடன் திருநெல்வேலி சந்திப்புக்கு திங்கள்கிழமை வந்தார்.

பின்னர் தனது சகோதரரான திருமலை முத்துக்குமாரசுவாமியுடன் கைலாசபுரம் பகுதியில் தாமிரவருணி ஆற்றுக்கு சுவாமிநாதன், சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சுவாமிநாதன் சென்றதால் தத்தளித்தார். அவரை மீட்க சென்ற சங்கரசுப்பிரணியனும் காப்பாற்ற முடியாமல் தவித்தார். பின்னர் இருவரும் நீரில் மூழ்கினர்.

தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலையில் சுவாமிநாதன் சடலமாக மீட்கப்பட்டார். இருள் சூழ்ந்ததால் சங்கரசுப்பிரமணியனை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் செவ்வாய்க்கிழமை காலையில் தேடும் பணி தொடங்கும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல்துறை வழக்குப்பதிந்து விசாரித்துவருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.