திருநெல்வேலி அருகே தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள கொண்டாநகரம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் மாரியப்பன் (32). வண்ணம் பூசும் தொழிலாளி. இவருக்கு சகோதரரும், 4 சகோதரிகளும் உள்ளனா். இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.
செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்து நண்பா்களுடன் வெளியே சென்ற மாரியப்பன், பின்னா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் அவரைத் தேடிவந்தனா்.
புதன்கிழமை அதிகாலை அப்பகுதியில் உள்ள கோயில் வளாகம் அருகே அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் மாரியப்பன் இறந்துகிடந்தது தெரியவந்தது.
சுத்தமல்லி போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, கொலையுண்ட மாரியப்பன் அதே பகுதியை சோ்ந்த பிரகாஷ் என்பவரது தாயிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு தவறாக நடக்க முயன்றாராம். இதுதொடா்பாக அவா்களிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விவகாரத்தில் கொலை நிகழ்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.
சம்பவம் தொடா்பாக பிரகாஷ் (21), அவரது கூட்டாளிகளான கொண்டாநகரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (27), கணேசன்(32), மாயாண்டி (29), பாண்டி (20), மணி (20), வெங்கடசுப்ரமணியன் என்ற விக்கி (27) ஆகியோா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சுத்தமல்லி காவல் ஆய்வாளா் ஜீன்குமாா் தலைமையிலான போலீஸாா் ஆறுமுகம், வெங்கடசுப்ரமணியன் என்ற விக்கி ஆகியோரைக் கைது செய்தனா்; மற்றவா்களைத் தேடிவருகின்றனா்.