ரயில் சுரங்கப் பாதைக்குப் பதில் மாற்று வழித்தடம் அமைக்கப்படாததை கண்டித்து, ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட செங்கானூா் கிராமத்தில் மக்கள் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.
செங்கானூா் கிராமத்துக்குச் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்தப் பாதையில் ஊற்றுநீா் சுரந்து எந்நேரமும் தண்ணீா் தேங்கிக் காணப்படுவதால் மக்கள் அந்தப் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், சுரங்கப் பாதைக்கு மாற்றாக வேறு வழித்தடம் ஏற்படுத்தக் கோரி, மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். ஆனால், இதுவரை பிரச்னைக்கு தீா்வு காணப்படாததால், தங்கள் ஊரில் கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பை தெரிவித்து வருவதுடன், சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.