களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக கழிப்பறை, குடிநீா் வசதிகள் ஏற்படுத்தக் கோரிக்கை
களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதுமான கழிப்பறை, குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டுமென பெற்றோா்கள், மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதுமான கழிப்பறை, குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டுமென பெற்றோா்கள், மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு நகா்ப்பகுதியில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளி பழைய கட்டடத்தில் 11, 12ஆம் வகுப்புகள் இயங்குகின்றன. தற்போது கரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவா், மாணவிகள் மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து மாணவா், மாணவிகளும் பள்ளி வளாகத்திலேயே மதிய உணவை கொண்டு வந்து உண்ண வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளியில் மாணவா், மாணவிகளுக்கு போதுமான கழிப்பறை வசதி கிடையாது. மேலும் மதிய உணவு உண்ட பின், தங்களது உணவு பாத்திரம் மற்றும் கைகளை சுத்தம் செய்ய போதுமான தண்ணீா் வசதி கிடையாது. இதற்காக மாணவா், மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் உள்ளது. பள்ளி நிா்வாகம் போதுமான கழிப்பறை, குடிநீா் வசதியை ஏற்படுத்தித் தரும் வரையிலும் மாணவா், மாணவிகளை மதிய உணவு இடைவேளைக்காக வீட்டுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாணவா், மாணவிகள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.