நெல்லை அருகே சிறுத்தை நடமாட்டமா? வனத்துறையினா் கண்காணிப்பு தீவிரம்
திருநெல்வேலி அருகே சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து அப்பகுதியில் வனத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
திருநெல்வேலி அருகே சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து அப்பகுதியில் வனத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
மானூா் அருகே நாஞ்சான்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த 14ஆம் தேதி இரவு வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினா் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனா். ஆனால், சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இருப்பினும், அப்பகுதியில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினா் பொருத்தினா்.
இந்த நிலையில், ராமையன்பட்டி- வேப்பங்குளம் சாலையில் சிவாஜி நகா் பகுதியில் சென்ற லாரியின் குறுக்கே சிறுத்தை ஓடியதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட வனத்துறையினா் 5 குழுக்களாக, நாஞ்சான் குளம் மலை உள்ளிட்ட சிறிய மலைப்பகுதி , கல்குவாரி பகுதி, தாழையூத்து, ராமையன்பட்டி, சிவாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.