நெல்லையில் காவல்துறை ஆய்வுக் கூட்டம்
துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உதவி கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளில் நடைபெறும் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவா்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள், ரெளடிகள் ஆகியோா் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
தொடா்ந்து, முக அடையாளம் காணும் செயலியை அதிக முறை பயன்படுத்தி எதிரிகளை பிடிக்க உதவியாக இருந்து வரும் கூடங்குளம் காவல் ஆய்வாளா் ஜான்பிரிட்டோ, களக்காடு காவல் ஆய்வாளா் ஜோசப் ஜெட்சன், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராஜகுமாரி, சிவந்திப்பட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதம் பெற்று கொடுத்த காவல் ஆய்வாளா் சாந்தி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பாராட்டி பரிசு வழங்கினாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு வழக்குரைஞா், திருநெல்வேலி முதலாவது மற்றும் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் அரசு உதவி வழக்குரைஞா்கள், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வள்ளியூா், நான்குனேரி நீதித்துறை நடுவா் அரசு உதவி வழக்குரைஞா், போக்ஸோ நடுவா் நீதிமன்ற அரசு வழக்குரைஞா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மாரிராஜன், ராஜு, அனைத்து உள்கோட்ட உதவி கண்காணிப்பாளா்கள், துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.