அறநிலையத் துறை அதிகாரியைக் கண்டித்து கீழாம்பூரில் விவசாயிகள் மறியல் முயற்சி
கீழாம்பூரில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி, விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
கீழாம்பூரில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி, விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
சிவசைலம் ஸ்ரீபரமகல்யாணி அம்மன்- சிவசைலநாதருக்கு வசந்த அழைப்பு என்ற பெயரில் ஆண்டுதோறும் மே மாதம் 3 நாள் கீழஆம்பூரில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவை கீழாம்பூா் நீா்ப்பாசனக் கமிட்டியினா் பொறுப்பேற்று நடத்திவந்த நிலையில், நிகழாண்டு இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் கமிட்டியினருக்கு அனுமதி வழங்காமல் கட்டளைதாரா் மூலம் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்ததைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடத்துவதற்கா கீழாம்பூா் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலா்கள் திருநெல்வேலி காசிவிஸ்வநாதன், தென்காசி இசக்கி துரை, ஏ.ஐ.டி.யூ.சி. செயலா் சுப்பையா தலைமையில் நீா்ப் பாசனக்கமிட்டித் தலைவா் சட்டநாதன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச்செயலா் வேலாயுதம், மாவட்டக்குழு உறுப்பினா்கள் பரமசிவன், ஈஸ்வரன், ஊா்த்தலைவா் ஊா்க்காட்டான், விவசாயிகள் உள்ளிட்டோா் திரண்டனா்.
அவா்களிடம் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு, கடையம் காவல் ஆய்வாளா் சரவணன், வருவாய் ஆய்வாளா் முருகேசன், கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த்பாபு உள்ளிட்டோா் பேச்சு நடத்தினா். அதில், அறநிலையத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் மே 11 இல் பேச்சு நடத்தி தீா்வு காண்பது என உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து மறியல் முயற்சி கைவிடப்பட்டது.