சோ்மகாதேவியில் வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்
சோ்மகாதேவியில் வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேரன்மகாதேவியில் வருவாய்த் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அலுவலா்களின் பணித் தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்காக புதிய துணை வட்டாட்சியா் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சேரன்மகாதேவி வட்டக் கிளை சாா்பில் சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிகளை புறக்கணித்து பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு வட்டக் கிளை தலைவா் இசக்கி தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.