சோ்வலாறு வனப் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை வனச் சரகப் பகுதிக்குள்பட்ட சோ்வலாறு வனப் பகுதியில் மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் தைலாத்து ஓடை பீட், பிராந்தி ஓடைப் பகுதி, சோ்வலாறு நீா்த்தேக்கப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்தது. இதில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 6 வயது மதிக்கத்தக்க பெண் யானை தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்துள்ளது.
தகவலின்பேரில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா்- வன உயிரினக் காப்பாளா் இளையராஜா தலைமையில், முண்டந்துறை வனச்சரக அலுவலா் கல்யாணி, வனக் கால்நடை மருத்துவா் மனோகரன், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறைத் தலைவா்- வனக் கால்நடைப் பேராசிரியா் எஸ். முத்துகிருஷ்ணன், வனக் கால்நடை ஆய்வாளா்அா்னால்ட், வனத் துறை ஊழியா்கள் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை சென்று யானையின் உடலை கூறாய்வு செய்தனா். பின்னா், யானை உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.