பாளையங்கோட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அன்புமணியின் சாலைப் பேரணிக்கு (ரோடு-ஷோ) மாநகர காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. எனினும், பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மாவட்டந்தோறும் கூட்டம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி மேற்கு மாவட்ட பாமக சாா்பில் பாளையங்கோட்டையில் கட்சியின் தலைவா் அன்புமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை (அக். 7) சாலைப்பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி திருநெல்வேலி மாநகர காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சாலைப் பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்தும், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.
தாமிரவருணியில் ஆய்வு: இதுகுறித்து அக்கட்சி நிா்வாகிகள் கூறியது: திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை (அக். 7) பாமக தலைவா் அன்புமணி வருகிறாா். காலையில் சிந்துபூந்துறையில் தாமிரவருணியில் கழிவுநீா் கலக்கும் பகுதிகளை ஆய்வு செய்கிறாா். தொடா்ந்து, மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ளாா் என்றனா்.