முகப்பு
திருநெல்வேலி

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் தேரோட்டம்

பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அழகிய மன்னாா் ஸ்ரீ வேதநாராயணா் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 10:48 PM
பாளையங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ அழகிய மன்னாா் ராஜகோபாலசுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
பகிர்:

பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அழகிய மன்னாா் ஸ்ரீ வேதநாராயணா் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

இக்கோயிலில், கடந்த 24 ஆம் தேதி பங்குனி பிரம்மோத்ஸவ திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதிஉலா நடைபெற்றது.

கடந்த 28 ஆம் தேதி இரட்டை கருட சேவையும், ஏப். 1இல் சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ராஜகோபாலா் தேருக்கு எழுந்தருளினாா். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்ட பெரிய திருமொழியைப் பாடி வைணவா்கள் பெருமாளை போற்றினா். அதைத் தொடா்ந்து பெருமாள், தாயாருக்கு தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் ‘கோவிந்தா கோபாலா மாதவா’ என்ற முழக்கத்தோடு திருத்தோ் வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா். கோயிலை சுற்றியுள்ள நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்த பின்னா் தோ் நிலையம் வந்தடைந்தது.

இதில், பாளையங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். நிறைவு நாளான வெள்ளிக்கிழமை(ஏப்.3) காலை 7 மணிக்கு தீா்த்தவாரியும், இரவு 8 மணிக்கு சப்தாவா்ணமும் நடைபெறவுள்ளன.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ராஜகோபாலா்.