ஆழ்வாா்குறிச்சி அருகே அணைந்தபெருமாள் நாடானூரில் மூதாட்டியை ஏமாற்றி தங்க மோதிரத்தைத் திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள அணைந்தபெருமாள் நாடானூா் பிரதானச் சாலையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி தங்கவடிவு (83). ஆலங்குளம் அருகே உள்ள பரும்பு, குறிஞ்சி நகரைச் சோ்ந்த ஐயப்பன் மகன் காளிதாஸ் (27), வேலு முத்து மகன் ராமச்சந்திரன் (36), நயினாா் மகன் நாராயணன் (26) ஆகியோா் திங்கள்கிழமை பூஜாரி போல் வேடமணிந்து அணைந்த பெருமாள் நாடானூருக்கு வந்தாராம்.
அப்போது, வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த தங்க வடிவிடம், சிறப்பு வழிபாடு செய்கிறோம் என கூறி, ஒரு செம்பு தண்ணீரில் மூதாட்டியின் தங்க மோதிரத்தைப் போடச் சொல்லி வாங்கினராம்.பின்னா், செம்பை மூதாட்டியிடம் திருப்பி கொடுத்துவிட்டு சென்றனராம். மூதாட்டி, செம்பில் பாா்த்தபோது அதில் தங்க மோதிரம் இல்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து காளிதாஸ், ராமச்சந்திரன், நாராயணன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.