தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) காலியாக உள்ள காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் செயல்பட்டு வரும், தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு நேரடி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காவலர் பதவிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதிகளுடன் (எட்டாம் வகுப்பு) பாதுகாப்பு பணி பயிற்சி முடித்தவராகவோ அல்லது முன்னாள் படைவீரராகவோ இருத்தல் வேண்டும். காவலர் தொகுப்பூதியம் ரூ. 10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் தங்களது புகைப்படம், மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வேப்பலோடை என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, 0461 - 2267300 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.