கோவில்பட்டியில் தொழிலாளி எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக பெண்ணை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தன.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 6ஆவது தெருவைச் சேர்ந்த சீனியப்பன் மகன் சண்முகம்(55). கூலித் தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பெயின்டர் முருகேசன் (45). இவருக்கும், சண்முகத்தின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாம். இந்நிலையில் சண்முகம், முருகேசனை கடந்த நவம்பர் மாதம் அரிவாளால் தாக்கினாராம். இதுதொடர்பாக முருகேசன் அளித்த புகாரின்பேரில் சண்முகத்தின் மீது கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே, ஜாமீனில் வெளியே வந்த சண்முகம் திங்கள்கிழமை இரவு வீட்டில் தனியாக படுத்திருந்தபோது, மர்ம நபர்கள் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு தப்பிவிட்டனராம்.
போலீஸார் சென்றுபார்த்தபோது, வீட்டின் உள்ளே சண்முகம் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், எட்டயபுரம் சாலையில் உள்ள திரையரங்கு அருகே செவ்வாய்க்கிழமை சந்தேகத்திற்கிடமாக பதுங்கியிருந்த ஒரு மூதாட்டியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர், ஏற்கெனவே சண்முகத்தின் மீது புகார் அளித்த முருகேசனின் தாய் செல்வி (63) என்பதும், திங்கள்கிழமை இரவு தன் மகன் முருகேசனுடன் சேர்ந்து சண்முகத்தை எரித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். முருகேசனை தேடி வருகின்றனர்.