தாமரைமொழியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் சண்முகபுரம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.
சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி இளைஞர் சங்க 5ஆம் ஆண்டை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி 2 நாள்கள் நடைபெற்றது. இதில் திசையன்விளை, இடையன்குடி, உடன்குடி, சாத்தான்குளம், வாலத்தூர், தாமரைமொழி, சண்முகபுரம், முத்தம்மாள்புரம், பூச்சிக்காடு உள்ளிட்ட 22 அணிகள் கலந்துகொண்டன. இறுதிப் போட்டியில் சண்முகபுரம் அணியை எதிர்த்து தாமரைமொழி அணி மோதியது. இதில் சண்முகபுரம் அணி வென்று முதல் பரிசை பெற்றது. 2ஆம் பரிசு தாமரைமொழி அணிக்கு கிடைத்தது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட இளைஞரணிச் செயலர் முத்துவேல் தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தாமரைமொழி இளைஞர் சங்கத் தலைவர் சிவா வரவேற்றார். சங்க நிர்வாகிகள் ராஜ், ரமேஷ், ஆனந்தன், சுந்தர், மது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சங்கச் செயலர் சிவக்குமார் நன்றி கூறினார்.