தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் கோவில்பட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
எட்டயபுரம் சாலையில், அம்பேத்கர் சிலை முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல் பேரணியை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். பேரணியில் சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும், சாலை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.
பேரணியில் கல்லூரி மாணவர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி மாணவர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத் செய்திருந்தார்.