சாத்தான்குளம் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ராமச்சந்திரன் (50) பணிபுரிந்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை படுக்கப்பத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டபோது படுக்கப்பத்து - செட்டிவிளை செல்லும் சாலையில் அதிசயபுரத்தைச் சேர்ந்த தா. சுமித் (26), க.ஜெகன் (24), கோ. ஜெபஸ்டின் மற்றும் பெரியதாழையைச் சேர்ந்த இருவர் என 5 பேர் மது அருந்தினராம். இதனை ராமச்சந்திரன் கண்டித்தாராம். அப்போது உதவி ஆய்வாளருக்கும், மது அருந்தியவர்களுக்குமிடையே ஏற்பட்ட தகராறில் சுமித் உள்ளிட்ட 5பேரும் சேர்ந்து ராமச்சந்திரனை கல்லால் தாக்கிவிட்டு ஓடிவிட்டனராம். இதில் காயமுற்ற அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பொன்னுச்சாமி வழக்குப் பதிந்து ஜெபஸ்டினை கைது செய்தார். இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.