மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 2 ஆசிரியர்கள் காத்திருக்கும் போராட்டம்
பொது மாறுதல், பணி நிரவல், கலந்தாய்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில்
பொது மாறுதல், பணி நிரவல், கலந்தாய்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இரண்டு ஆசிரியர்கள் காலவரையற்ற காத்திருக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வித் துறை சார்பில் கடந்த மே மாதம் 24 , 25 ஆம் தேதிகளில் நடைபெற்ற பொது மாறுதல், பணி நிரவல், கலந்தாய்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, அதை கண்டித்து ஆசிரியர்கள் செல்வக்குமார், சாந்தா ஆகியோர் வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு வரை போராட்டத்தை தொடர்ந்தனர். முறைகேடுகள் சரி செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டம் குறித்து ஆசிரியர் செல்வக்குமார் கூறியது: முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட போது நேரடி விசாரணை செய்து உரிய பணியிட மாறுதல் செய்ய மாவட்டம் தொடக்கக்கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காலவரையற்ற போராட்டத்தை நடத்துகிறோம் என்றார் அவர்.