தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியவை.
தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “மேற்கு வங்க மக்கள் ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இங்கு நம்பிக்கையான, சுதந்திரமான மற்றும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதே எங்களின் இலக்கு. தகுதியுள்ள வாக்காளர் ஒவ்வொருவரும் அவர்களின் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான உரிமை உள்ளது. தகுதிவாய்ந்தவர்கள் எவரின் வாக்குகளும் நீக்கப்படாது.
மேற்கு வங்கத்தில் 80,000 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள நிலையில் அவற்றில் 61,000 வாக்குச்சாவடிகள் கிராமப் புறங்களில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் விதமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீத நேரடி இணைய ஒளிபரப்பை தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க எதிர்க்கட்சிகள் முன்மொழிவு ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.