தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தொடர்வது அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: காங்கிரஸ்
தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தொடர்வது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என காங்கிரஸ் விமர்சித்தது தொடர்பாக...
ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகத் தொடர்வது அரசியலமைப்பு மீதான தாக்குதல் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
73 எதிர்க்கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) மாநிலங்களவையில் புதிய பதவி நீக்க நோட்டீஸை சமர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:
Advertisement
“73 எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி, குடியரசுத் தலைவருக்கு ஒரு தீர்மானத்தை முன்வைப்பதற்காக, மாநிலங்களவை செயலரிடம் ஒரு புதிய தீர்மான அறிவிப்பைச் சமர்ப்பித்துள்ளோம்.
இந்தக் கோரிக்கையானது, 2026 மார்ச் 15 மற்றும் அதற்குப் பின்னர் அவர் செய்த செயல்கள் மற்றும் தவறுகளிலிருந்து எழும் நிரூபிக்கப்பட்ட முறைகேடுகளை அடிப்படையாகக் கொண்டது.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக தற்போது ஒன்பது குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை மிகவும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவற்றை மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. அவர் அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான ஒரு தாக்குதலாகும்.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதல்களின்படி, தொடர்ந்து செயல்படுவதற்காக, இந்த நபர் பதவியில் நீடிப்பது முற்றிலும் வெட்கக்கேடானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மார்ச் 12 ஆம் தேதி 193 எம்பிக்கள் (மக்களவை 130 + மாநிலங்களவை 63) கையெழுத்திட்டு வழங்கிய தீர்மானம் ஏப்ரல் 6 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது 73 எம்.பிக்களின் கூடுதல் கையெழுத்துகளுடன் புதிய நோட்டீஸ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.