ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்!
ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்க படைகள் தீவிரப்படுத்தியுள்ளது குறித்து...
ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை அமெரிக்க படைகள் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கடந்த பிப்.28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே வெடித்த போர் கடந்த ஜூன் மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆனால், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள கடல்நீர் சுத்தகரிப்பு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பாலங்களின் மீது அமெரிக்க படைகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) அதிகாலை தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், ஈரானின் முக்கிய துறைமுகமான பந்தார் அப்பாஸ் மற்றும் தெஹ்ரான் இடையேயான போக்குவரத்தை முடக்கும் நோக்கத்தோடு நடத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தப் பாதைகள் முடக்கப்பட்டால், ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் சுமார் 9 கோடி மக்களின் அத்தியாவசிய தேவைகளின் போக்குவரத்து பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
இத்துடன், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதும் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தப் புதிய தாக்குதல்களில் இதுவரை 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முழுவதுமாக முடக்கியுள்ளதால் சர்வதேச அளவில் எரிபொருள் விலையானது உயர்ந்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவுக்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் கத்தாரின் மீதும் ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
US forces have intensified attacks on key Iranian infrastructure.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.