கோவில்பட்டியில் கூட்டுறவு வார விழா
கோவில்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 64ஆவது கூட்டுறவு வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 64ஆவது கூட்டுறவு வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் துணைத் தலைவர் ரமேஷ்மூர்த்தி தலைமை வகித்தார். சங்க மேலாண்மை இயக்குநர் செல்வகோகிலா வரவேற்றார். மண்டல இணைப் பதிவாளர் அருளரசு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
துணைப் பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் சாமி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பொன்மாடன், சங்க உறுப்பினர் செண்பகசுப்பு, சங்கப் பணியாளர் அருணாசலபெருமாள் ஆகியோர் பேசினர்.
முன்னதாக, விற்பனை சங்க வளாகத்தில் மரக்கன்று நடும் விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சங்க வளாகத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பயறு வகை பதனிடும் அலகை மண்டல இணைப் பதிவாளர் அருளரசு பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த சங்க வளாகத்தில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் உளுந்து, பாசி, துவரை போன்ற பயறு வகைகளை தரம் பிரித்து தோல் நீக்கி தரும் வகையிலான இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், எட்டயபுரத்தில் ரூ.39 லட்சம் செலவில் சேமிப்புக் கிடங்கு, உட்கட்டமைப்பு நிதியின்கீழ் 500 மெட்ரிக் டன் தானியம் சேமிப்புக் கிடங்கு மற்றும் கோவில்பட்டியில் ரூ.15 லட்சம் செலவில் 100 மெட்ரிக் டன் தானியம் சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
இந்த இரு கிடங்கு மற்றும் பயறு வகை பதனிடும் அலகை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இம்மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியின்போது பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார் என்றார் அவர்.