தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைக்கு இதுவரை புகைப்படம் அளிக்காதவர்கள் சனிக்கிழமை (அக். 14) நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு புகைப்படத்தை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் நுகர்வோர்களுக்கு 1.4.2017 முதல் மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் புகைப்படம் இல்லாததால் சிலருக்கு மின்னனு குடும்ப அட்டை அச்சடிக்க இயலாமல் உள்ளது.
புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல் அந்தந்த பகுதி நியாயவிலைக் கடைகளில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் உள்ள குடும்ப அட்டைதாராகள் தங்களது குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை அந்தந்த நியாயவிலைக் கடைகளில் சனிக்கிழமை (அக். 14) நடைபெறும் சிறப்பு முகாம்களில் தவறாது ஒப்படைக்கவேண்டும். புகைப்படம் கொடுத்தவுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு மின்னனு குடும்ப அட்டை உடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.