சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து பெண், குழந்தையிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடி சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
போலையார்புரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே ஊரில் ஒலிப்லிபெருக்கி வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி மாலதி (28). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரெஜோலா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது மாலதி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு ராஜ்குமார், தொழில் விஷயமாக வெளியூர் சென்றுவிட்டாராம். இதனால் மாலதி, வீட்டை உள்பக்கமாக பூட்டி, கணவர் வருகைக்காக சாவியை ஜன்னல் அருகே வைத்திருந்தாராம். இதனை அறிந்து வியாழக்கிழமை அதிகாலை வந்த அடையாளம் தெரியாத இருவர் அச்சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று அங்கு தூங்கி கொண்டிருந்த மாலதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் குழந்தை அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியைப் பறித்தனராம். அப்போது கண் விழித்த மாலதி கூச்சலிலிட்டாராம். இருவரும் கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு நகையுடன் தப்பி விட்டனராம்.
இதுகுறித்து, புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.