கோவில்பட்டியில் அம்பேத்கர் சிலை திறப்பு
கோவில்பட்டி அரசு மருத்துவமனை எதிரே புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை எதிரே புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி எட்டயபுரம் சாலை சந்திப்பு அரசு கால்நடை மருத்துவமனை எதிர்புறம் அம்பேத்கர் சிலை இருந்து வந்தது. வேம்பார் - பருவக்குடி சாலை விரிவாக்கப் பணியையடுத்து அம்பேத்கர் சிலை இடமாற்றம் செய்ய நெடுஞ்சாலைத் துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.
அதையடுத்து, அரசு மருத்துவமனை எதிர்புறம் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைமை வகித்து, சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டத் துணைத் தலைவர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் அய்யாத்துரை, மாநிலப் பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், வழக்குரைஞரணியைச் சேர்ந்த மாணிக்கம், புதிய பாரத கட்சியின் மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், ஒன்றியச் செயலர் சார்லஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டிக் குழுத் தலைவர் தாவீதுராஜா தலைமையில், கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.