வழக்குகள் தொடர்பாக சமரச தீர்வு மையத்தை அணுகலாம்: மாவட்ட நீதிபதி சாருஹாசினி
வழக்குகள் தொடர்பாக பொதுமக்கள் சமரச தீர்வு மையத்தை அணுகலாம் என்றார் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சாருஹாசினி.
வழக்குகள் தொடர்பாக பொதுமக்கள் சமரச தீர்வு மையத்தை அணுகலாம் என்றார் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சாருஹாசினி.
தூத்துக்குடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 13 ஆவது சமரச தின விழாவை தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது:
குடும்ப வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள், உரிமையியல் வழக்குகள் சமரசமாக தீர்க்கக்கூடிய குற்ற வழக்குகள், சமரச மையத்தின் மூலம் பயிற்சி பெற்ற சமரசர்கள் மூலம் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சமரச மையத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் ரகசியமாக பாதுகாக்கப்படும். சமரச மையத்தின் மூலம் தீர்வு காண்பதால் கால விரயம், பண விரயம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. வழக்காடிகளிடையே பகை நீங்கி சுமுக உறவு ஏற்படுகிறது.
சமரச தீர்வு மையத்தில் முடிவு காணப்படவில்லை என்றால், அதன்பிறகு வழக்காடிகள் தங்கள் வாதத்தை நீதிமன்றத்தில் தொடரலாம். பொதுமக்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சமரச மையத்தை நாடி பயன்பெற வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, சமரசமாக வழக்குகளை தீர்வு காண்பது குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அவர் பொதுமக்களுக்கு விநியோகித்தார். நிகழ்ச்சியில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ. சுபத்ரா, சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன், வழக்குரைஞர் கே. முருகன், முதன்மை நிர்வாக அதிகாரி கிறிஸ்டி சொர்ணபாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.