விருதுநகரில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்த தன் உறவினரின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
மதிமுக பொதுச்செயலர் வைகோவின் உறவினர் சரவணசுரேஷ் (52). இவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை தீக்குளித்தார். .விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சனிக்கிழமை இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த பெருமாள்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு வைகோ, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன், முன்னாள் எம்.பி.க்கள் தங்கவேலு, சிப்பிப்பாறை ரவிசந்திரன், கணேசமூர்த்தி, மதிமுக மாவட்டச் செயலர்கள் ஆர்.எஸ். ரமேஷ், நிஜாம், தி.மு. ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், மதிமுக மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ரமேஷ், மருத்துவர் சீனிவாசன், தொழிலதிபர் ராமானுஜம் கணேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, மயானத்தில் அனைத்துக் கட்சியினர் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் வைகோ பேசும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.