மத்திய அரசின் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தில் இணைப்பு பெற ஏப்ரல் 20 ஆம் தேதி அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் குறைந்தது 25 ஆயிரம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பாரத் கேஸ் நிறுவன மண்டல மேலாளர் சதீஷ்குமார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏப்ரல் 20 ஆம் தேதி உஜ்ஜவலா தினமாக கொண்டாட முடிவு செய்து உள்ளது. இந்தத் திட்டத்தின் படி, தூத்துக்குடி மண்டலத்துக்குள்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் ஊராட்சிக்கு 500 பேரை தேர்வு செய்து, அதில் குறைந்தது 100 பேருக்கு இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 250 கிராமங்களில் சிறப்பு முகாம் மூலம் ஏறத்தாழ 25 ஆயிரம் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, விற்பனை பிரிவு மேலாளர் லட்சுமணன் உடனிருந்தார்.