ஸ்டெர்லைட் ஆலையால் நோய் பரவுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அரசு மருத்துவக் குழுவை அமைத்து உரிய ஆய்வு மேற்கொண்டு மக்களின் பயத்தை போக்க வேண்டும் என்றார் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அவர் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த ஆலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும், நிரந்தர மற்றும் தற்காலிகமாக ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் அங்கு பணியாற்றி வரும் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பரவுவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு மருத்துவக் குழுவை அமைத்து உரிய ஆய்வு மேற்கொண்டு மக்களின் பயத்தை போக்க வேண்டும்.
தூத்துக்குடியில் மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.