தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: தாமிரவருணி ஆற்றில் இருந்து, 20 எம்ஜிடி தண்ணீர் எடுத்து தொழிற்சாலைகளுக்காக அரசு வழங்கி வருகிறது. நிகழாண்டு பருவமழை பெய்த காலத்திலேயே தொழிற்சாலைகளுக்கு, 9 எம்ஜிடி அளவுதான் தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது 5 எம்ஜிடிக்கும் குறைவாகவே தண்ணீர் வழங்கப்படுகிறது. அதிலும் ஸ்டெர்லைட் ஆலை இல்லை.
தற்போது மணிமுத்தாறு அணையில், 78 அடி தண்ணீர் உள்ளது. அதனால் மாவட்டத்தில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. வாரத்தின் தொடக்க நாளில் முன்னுரிமை அடிப்படையில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகள், தூர்வார வேண்டிய குளங்கள், டெங்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை தடுக்க மக்கள் கொடுத்துள்ள அனைத்து மனுக்களும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை தனது விரிவாக்கத்திற்கு, மத்திய வனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பருவகாலமாற்றம் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கி இருக்கிறது. அந்த அனுமதியின் அடிப்படையில், தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம், ஆலையை நிறுவிக்கொள்ள அனுமதிக்கும் சிடிஇ சான்று வாங்கி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் விரிவாக்கப் பணிகளை ஆலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.