இஸ்ரேல் - ஈரான் போர்: இந்தியாவில் பாசுமதி அரிசி விலை குறைகிறது! எப்படி?
இஸ்ரேல் - ஈரான் போரால் இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு பற்றி...
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது உற்பத்தியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரால் அந்த இரு நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எரிசக்தி துறையில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே இன்று இந்தியாவில் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன. 11 மாதங்களுக்குப் பிறகு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எரிசக்தி பொருள் தட்டுப்பாட்டைக் குறைக்க எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாசுமதி அரிசி
இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள ஹோர்முஸ் நீரிணை, இந்தியாவில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான முக்கிய கடல்சார் வழித்தடம். தற்போது இந்த ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அவ்வழியாகச் செல்லும் கப்பல்களை ஈரான் குறிவைப்பதால் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து பாசுமதி ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தற்போது இந்த வழியாகச் செல்ல முடியாததால் பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. போரால், கப்பல் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு கொள்கலனுக்கு 3,500 டாலரில் இருந்து 4,500 டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 4 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய முடியாமல் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாய், ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இன்னும் சில நாள்களுக்குப் போர் தொடர்ந்தால் பாதிப்பு இன்னும் மோசமாகும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் உள்நாட்டு சந்தையில் பாசுமதி அரிசி விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. டன் கணக்கில் பாசுமதி அரிசி இங்கு தேங்கியுள்ளதால் இந்த விலை குறைப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது ஈரான் போரால் துபாய் மற்றும் ஈரானின் துறைமுகங்களில் பாசுமதி அரிசி சரக்குகள் தேங்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.
பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் வழியாக நிலவழிப் பாதை மூடப்பட்டதால் தற்போது ஈரான் வழியாக கடல் போக்குவரத்துஅல்லது சாலைவழியாக அனுப்பப்படுகிறது. ஈரான் போரால் தற்போது ஆப்கானிஸ்தானுக்கு அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஈரான் வழியாக கஜகஸ்தான் செல்லும் அரிசி ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் பஞ்சாப், ஹரியாணா மாநிலத்தில் இருந்து 17% முதல் 20% உற்பத்தி இருக்கும் என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் தவிர மற்ற நாடுகளுக்கு மாற்றுப் பாதை கண்டறியப்படாவிட்டால் பிற நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி பாதிக்கப்படுவதுடன் இந்தியாவில் அரிசி தேங்குவதால் இங்கு பாசுமதி விலை குறையும் அபாயம் ஏற்படும். இது உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே கடந்த சில நாள்களில் இந்தியாவில் பாசுமதி அரிசி விலை 10% குறைந்துள்ளதாகவும் குவிண்டாலுக்கு ரூ. 400 முதல் ரூ. 500 வரை குறைந்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய கடல் எல்லைக்குச் சென்ற பாசுமதி அரிசி ஏற்றப்பட்ட கப்பல்கள் திரும்பி வரவழைக்கப்பட்டுள்ளன. போர் முடிந்து கடல்வழிப் பாதைகள் இயல்புநிலைக்குத் திரும்பினாலும் கப்பல் போக்குவரத்து செலவு உயரும் அபாயம் இருப்பதாகவும் அரிசி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.