தூத்துக்குடி ரயில் நிலையத்தை மீளவிட்டான் பகுதிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் மூக்கன்சாமி, எஸ். ரவிக்குமார், பொதுச் செயலர் சீனிவாசன், பொருளாளர் ஆர். பாலசிங், செயலர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின்போது, தூத்துக்குடி மாநகராட்சி வட்ட தெப்ப பூங்கா என்ற பெயரை அமரர் குரூஸ் பர்னாந்து நினைவு பூங்கா என பெயர் சூட்ட வேண்டும், தூத்துக்குடி மாநகராட்சியின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரயில் நிலையத்தை மீளவிட்டான் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.