சாத்தான்குளம் அருகே 2 அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற அரசுப் பேருந்து சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை பகுதியில் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் பேருந்து ஓட்டுநரான நாகர்கோவில் கொட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் (46) காயம் அடைந்தார். இதுபோல் நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசுப் பேருந்து மீதும் கல்வீசி தாக்கப்பட்டது.சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கோயில் அருகே குடிபோதையில் நின்ற இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வையப்பமலையைச்சேர்ந்த குப்புசாமி மகன் மூர்த்தி (35) என்பதும், மெஞ்ஞானபுரம் அணைத்தலை பகுதியில் கிணறு மற்றும் தோட்ட வேலைக்காக வந்த இவர் குடிபோதையில் பேருந்துகள் மீது கல்வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.