திருச்செந்தூர் அருகே நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்தனர்.
ஆழ்வார்திருநகரி காந்தி நகரைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (27). இவரது மனைவி பேபி சந்திரா (25). இவர்களது மூன்று வயது குழந்தை வினோதினிக்கு திருச்செந்தூர் கோயிலில் முடிகாணிக்கை செலுத்துவதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர்.
கோயிலில் வினோதினிக்கு மொட்டை போட்டு அதே வேனில் மாலையில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் தனியார் பெண்கள் கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேன் மோதியது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுககனி (36), ருக்மணி (14), வசந்த் (18), எபிஷா (30), பவானி (22), பேச்சியம்மாள் (50), லட்சுமி (21), பஞ்சவர்ணம் (60), மீனா (21), ராஜரத்தினம் (38), கண்ணம்மாள் (50), ராணி (50), ஜோதி (21) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் கண்ணம்மாள், ராணி, ஜோதி, லட்சுமி ஆகிய நான்கு பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.