பேரணியில் போலீஸ் தடியடி: தூத்துக்குடி ஏடிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் மனு
தூத்துக்குடியில் பேரணியாகச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய மாநகர காவல் உதவிக் கண்காணிப்பாளர்,
தூத்துக்குடியில் பேரணியாகச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய மாநகர காவல் உதவிக் கண்காணிப்பாளர், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சியினர் புதன்கிழமை மனு அளித்தனர்.
கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் க. கனகராஜ், மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. பெருமாள், மாநகரச் செயலர் தா. ராஜா ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரனிடம் புதன்கிழமை அளித்த மனு:
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டை முன்னிட்டு, உரிய அனுமதி பெற்று, செந்தொண்டர் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை அமைதியாக நடைபெற்றது. அப்போது தூத்துக்குடி மாநகர காவல் உதவிக் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், வாகனங்கள் செல்ல அனுமதித்து, பிரச்னையை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளார்.
மேலும், கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தும் சென்ட்ரிங் பலகைகளை எடுத்து அவரும், சக காவலர்களும் பேரணி சென்ற செந்தொண்டர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், 5 வயதுச் சிறுவன் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்துள்னர்.
ஏடிஎஸ்பி செல்வநாகரத்தினத்தின் அணுகுமுறை பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு அவரே காரணமாக இருந்துள்ளார். எனவே, அவரையும், அவருடன் சேர்ந்து தாக்குதல் நடத்திய காவலர்களையும் இடைநீக்கம் செய்வதுடன் துறைவாரியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.