கோவில்பட்டியில் கழிவறையில் ஆண் சடலம் மீட்பு
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பொதுக் கழிப்பிடத்தில் கிடந்த ஆண் சடலத்தைப் போலீஸார் மீட்டனர்.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பொதுக் கழிப்பிடத்தில் கிடந்த ஆண் சடலத்தைப் போலீஸார் மீட்டனர்.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தையடுத்த தனியார் விடுதி அருகே நகராட்சிக்குச் சொந்தமான பொது கழிப்பிடத்தை தனியார் ஒருவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் கழிவறைக்கு சென்றாராம். ஆனால் வெகுநேரமாகியும் வெளியே வராததையடுத்து அங்கு பணியிலிருந்த பணியாளர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாராம்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் இறந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து போலீஸார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் வாசுதேவநல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த கோபால் மகன் லாரி அதிபர் மற்றும் ஓட்டுநருமான முப்பிடாதி (35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.