நேஷனல் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 30ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 30ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. ராமசாமி, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு ஆகியோர் தலைமை வகித்தனர். கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் சென்னம்மாள் ராமசாமி, கல்லூரிச் செயலர் சங்கரநாராயணன், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம், கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சண்முகவேல் வரவேற்றார்.
தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளர் எஸ். கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: பட்டதாரிகள் தங்களின் தொழில்நுட்பத்திறன், மேலாண்மைத் திறன், தலைமைப் பண்பு, ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை தங்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பின்பற்ற வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பட்டதாரிகளின் பங்கு முக்கியமானது என்றார்.
தொடர்ந்து, 524 மாணவ, மாணவிகளுக்கு இளங்கலைப் பட்டங்களையும், 46 மாணவ, மாணவிகளுக்கு முதுகலைப் பட்டங்களையும், 8 பேருக்கு முனைவர் பட்டங்களையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
விழாவில் பட்டம் பெற்றவர்களில் 35 இளங்கலை மாணவர்கள் மற்றும் 4 முதுகலை மாணவர்கள் தன்னாட்சி தரப்பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் கோமதி தலைமையில், அனைத்துத் துறை தலைவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.