பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து 3ஆவது நாளான விôயழக்கிழமை கோவில்பட்டி அஞ்சலக கோட்டத்திற்கு உள்பட்ட 276 அஞ்சலகங்கள் மூடப்பட்டன.
கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கான கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்தவும், தொழிற்சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், கிராமப்புற ஊழியர்கள் அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் மற்றும் தேசிய அஞ்சல் கிராம ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமப்புற ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அஞ்சல் 3 மற்றும் 4 ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, கோவில்பட்டி அஞ்சலக கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய தலைமை அஞ்சலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 199 அஞ்சல் 3 பிரிவைச் சேர்ந்த ஊழியர்களில் 77 பேரும், தபால்காரர்கள் 75 பேரில் 39 பேரும், குரூப் டி ஊழியர்கள் 10 பேரில் 3 பேரும் வியாழக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபோல, 592 கிராமப்புற அஞ்சல் ஊழியர்களில் 581 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் கோவில்பட்டி அஞ்சலக கோட்டத்திற்கு உள்பட்ட 280 கிளை அஞ்சலகங்களில் 255 கிளை அஞ்சலகங்களும், 63 துணை அஞ்சலகங்களில் 21 துணை அஞ்சலகங்களும் 3ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.