கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது சிறுவன் திடீரென இறந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலுப்பையூரணி கூசாலிபட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சங்கையா. வியாபாரி. இவருக்கு சதீஷ்குமார் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. சதீஷ்குமார் கடந்த 5 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், செப். 5ஆம் தேதி வீட்டருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவரின் ஆலோசனைப்படி அங்கேயே ஊசி போட்டாராம். 6ஆம் தேதி ஊசி போட்ட இடத்தில் வீக்கம் இருந்ததாம். இதையடுத்து, மீண்டும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சனிக்கிழமை வீக்கத்தை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் சதீஷ்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து, சதீஷ்குமாரின் தந்தை சங்கையா அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.