கழுகுமலை பேரூராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி அமமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கழுகுமலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யவேண்டும். அனைத்து வார்டு பகுதியிலும் உள்ள கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்யவேண்டும். பூட்டிக்கிடக்கும் பொதுக் கழிப்பிடத்தை பயன்பாட்டுக்குத் திறந்துவிட வேண்டும்.
பேரூராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சாலை வசதி, ஓடை வசதி, தெரு விளக்கு வசதியை ஏற்படுத்தவேண்டும். கழுகுமலை பேரூராட்சியில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடத்தை உடனடியாக நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலர் செல்வகுமார் தலைமையில், நகரச் செயலர் கோபி என்ற பேச்சிமுத்து, கழுகுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முத்தையா, முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி, நகர ஜெயலலிதா பேரவையைச் சேர்ந்த சிவகுருநாதன் உள்பட கழுகுமலை பேரூராட்சி பகுதி பொதுமக்கள் திரளானோர் காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர், கோரிக்கை மனுவை இளநிலை உதவியாளர் செந்தில்குமாரிடம் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், கோரிக்கை மனுவை பேரூராட்சி நிர்வாக அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.