ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கவர்னகிரியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அமுதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுந்தரலிங்கம் நகர் கிராம மக்கள் சார்பில், சுந்தரலிங்கனாரின் நேரடி வாரிசு பொன்ராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன், புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலர்கள் பாபு, மனோகரன் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்தனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், அமமுக வேட்பாளர் ம. புவனேஸ்வரன், சுயேச்சை வேட்பாளர் சுபாஷினி மள்ளத்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சுந்தரலிங்கனார் சிலைக்கு, மருதம் மா.மாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர் பாரத்குமார், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.ரமேஷ், சிபிஐ மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலர் கதிரேசன், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பார்வதி சண்முகச்சாமி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதுபோல, தெற்கு திட்டங்குளம், கூசாலிபட்டி, மூப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து, வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மரியாதை செலுத்தினர்.