தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து காவல் துறைக்கு தெரிவிக்க அவசர அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்து சிறப்பு பயிற்சி பெற்ற 8 காவல்துறை வீரா்கள் அடங்கிய குழுவினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். மீட்புக் குழுவினா் தூத்துக்குடி, ஆழ்வாா்திருநகரி, சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் முகாமிட்டு ஆங்காங்கே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது அவரச உதவிகள் தேவைப்பட்டாலோ காவல்துறையின் செல்லிடப்பேசி எண் 95141 44100 அல்லது அவசர தொலைபேசி எண் 100-ஐ தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.